கொல்கத்தா, ஜூலை 6 - ‘‘மதுவையும், மாமிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் தெய்வம்தான் காளி’’ என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா எம்.பி. கூறிய கருத்தையும் சங்-பரிவாரங்கள் சர்ச்சையாக்கியுள்ளனர். அவர் மீது அவதூறு மழை பொழிந்து வருகின்றனர். இது மேற்குவங்கத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியாக மாறிய நிலையில், “மஹூவா மொய்த்ரா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து” என்று கூறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தப்பித்துக் கொண்டுள்ளது.
லீனா மணிமேகலை
தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் லீனா மணி மேகலை ‘காளி’ என்ற ஆவணப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் விளம்பரத்திற்கான முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி, கனடா நாட்டின் டோரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சி யகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த திரை யிடலுக்காக போஸ்டர் ஒன்றை லீனா மணிமேகலை வெளியிட்டிருந்தார்.
சர்ச்சையான போஸ்டர்
அந்த போஸ்டர், காளி வேடமணிந்த பெண்ணின் கையில் சிகரெட் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரி வாள் ஆகிய ஆயுதங்களுடன் தன்பாலின உறவாளர்கள் (LGBTQ+) சமூகத்தினரின் பெருமித அடையாளமாக கருதப்படும் வானவில் கொடியும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அதற்கு இந்துத்துவா அமைப்புகளிட மிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. “லீனா மணிமேகலை யைக் கைது செய்!” (#Arrest LeenaManimekalai) என்ற ஹேஷ்டேக்-கை அவர்கள் டிரெண்ட் ஆக்கினர்.
சங்-பரிவாரங்கள் மிரட்டல்
பசுப் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும், தில்லியைச் சேர்ந்த அஜய் கவுதம் உட்பட பலர் லீனா மணிமேகலை மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், உ.பி. பாஜக அரசின் காவல்துறை 10 பிரிவுகளிலும், தில்லி காவல்துறை 2 பிரிவுகளிலும் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்துத்துவா சாமி யார்கள் சிலர், லீனா மணிமேகலைக்கு கொலைமிரட்ட லும் விடுத்து வருகின்றனர். லீனா மணிமேகலை அவரது போஸ்டரைத் திரும்பப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கனடா அரசை, அந்நாட்டிற்கான இந்திய தூதரகமே அதிகாரப்பூர்வ மாக வலியுறுத்தல் வைத்துள்ளது.
‘இந்தியா டுடே’ நிகழ்ச்சி
இந்நிலையில், ‘இந்தியா டுடே’ பத்திரிகை நடத்தும் ஆண்டுக் கூட்டத்தில் நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் கலந்துகொண்டார். அப்போது, காளி போஸ்டர் விவகாரம் குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
நுஷ்ரத் ஜஹான் நழுவல்
2020 செப்டம்பரில், துர்கா போல் வேடமணிந்து போட்டோ ஷூட் நடத்தியதற்காக நுஷ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததால், அவரிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மத உணர்வு களைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று கூறிவிட்டு அவர் நழுவிக் கொண்டார்.
மஹூவா மொய்த்ரா கருத்து
ஆனால், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு எம்.பி.யான மஹூவா மொய்த்ராவிடம் கேட்டபோது, “என்னைப் பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான். தெய்வத்தை கற்பனை செய்து கொள்ள சுதந்திரம் இருக்கிறது. சில இடங்களில் கடவுள்களுக்கு விஸ்கி வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று மது பிரசாதமாக வழங்கப் படுகிறது என்றால் அவர்கள் அதை நிந்தனை என்று கூறி முகம் சுளிப்பார்கள். வேறு சில இடங்களில் அது தெய்வத்துக்கு உகந்ததாக உள்ளது. எனவே தங்களின் தெய்வத்துக்கு என்ன தர வேண்டும் என்பதை பக்தர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார். அதுவரை லீனா மணிமேகலை மீது அவதூறு மழை பொழிந்துகொண்டிருந்த சங்-பரிவாரங்கள், மஹூவா மொய்த்ரா இவ்வாறு கூறியதும், தங்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பினர். வழக்கம்போல அவதூறு சொற்களாலும், மிரட்டல்களாலும், அவர்மீது விழுந்து பிராண்டத் துவங்கினர். ஆனால், மஹூவா மொய்த்ரா பின்வாங்குவதாக இல்லை.
டுவிட்டர் பதில் மீண்டும் சூடு
‘‘அனைத்து சங்கிகளுக்கும் சொல்வது என்ன வென்றால், பொய் சொல்வதாலேயே உங்களை சிறந்த இந்துக்களாக காட்டிக் கொள்ள முடியாது. நான் எந்தப் படத்தையோ அல்லது போஸ்டரையோ ஆதரிக்க வில்லை. புகைப்பிடித்தல் என்ற வார்த்தையையும் நான் எப்போதும் குறிப்பிடவில்லை. தாராபீடத்தில் உள்ள எனது மா காளியை சென்று பார்வையிடுங்கள். அவ ருக்கு என்ன உணவு & பானங்கள் வழங்கப்படுகின்றன என்பது தெரியும். ஜெய் மா தாரா’’ என்று டுவிட்டரில் மீண்டும் சூடு கொடுத்தார். இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் பிரச்சனையாக எழுந்தது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கான நெருக்கடி யாக மாறியது.
மொய்த்ராவை கைவிட்ட திரிணாமுல்
இதையடுத்து, “மஹூவா மொய்த்ரா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து” என்றும், “அதில் கட்சிக்கு உடன்பாடில்லை” என்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. அதுமட்டுமல்லாமல், “காளி குறித்து மொய்த்ரா தெரிவித்த கருத்துக்கள் கண்டனத்துக்குரியது” என்று அறிக்கை வெளியிட்டதுடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை மஹூவா மொய்த்ரா பின்தொடர்ந்த நிலையில் அதனை ‘அன்பாலோ’ செய்யுமாறு உத்தரவிட்டது. அதனை ஏற்றுக்கொண்டு, மொய்த்ராவும் திரிணாமுல் கட்சியின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டுள்ளார்.
கூட்டாட்சி அமைப்பின் தூண்களை மோடி அரசு அடித்து நொறுக்கி விட்டது!
‘இந்தியா டுடே’ நடத்திய மாநாட்டில், “அதிகார மறுசீரமைப்பு: இந்திய கூட்டாட்சியின் புதிய அமைப்பு” என்ற தலைப்பில் நடந்த அமர்விலும் மொய்த்ரா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கூட்டாட்சி அமைப்பின் தூண்களை மோடி அரசு அடித்து நொறுக்கி விட்டதாக குற்றம் சாட்டினார். அந்த உரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. நமது அரசியலமைப்பு சாசனம் ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி இரண்டையும் குறிக்கும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ஆரம்பத்தில் இருந்தே நாம் ஒரு நெகிழ்வான அமைப்பைக் கொண்டிருந்தோம். நமது அமைப்பு எந்தளவுக்கு ஒருமைப் படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்கையில் அது வியப்பளிக்கிறது என்றும் அம்பேத்கர் கூறினார்.
ஆனால், இந்த நெகிழ்வான தன்மையையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் தவறான முன்னெடுப்பு களைச் செய்வதால், தற்போது பிரச்சனைகள் உருவாகியிருக்கின்றன. 65 ஆண்டுகளாக இருந்த திட்டக்குழு அகற்றப்பட்டபோது கூட்டாட்சி முறைக்கு முதல் அடி விழுந்தது. திட்டக்குழு ஒருமித்த உடன்படிக்கையின் அடிப்படையில் மானியங்களை வழங்கியது. ஆனால், இப்போது இருக்கும் ‘நிதி ஆயோக்’ அதன் விருப்பத்தின் அடிப்படையில் மானியங்களை வழங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்றிய அரசு மிகவும் மோசமான நிதிநிலையைக் கொண்டு இருக்கிறது. அதை ஈடுகட்ட தற்போது மாநிலங்களை வஞ்சிக்கிறது. ‘செஸ்’ வரியை அதிகரித்தார்கள். மாநிலங்களுக்கு உரிய ஜிஎஸ்டி பங்கைச் சரியான நேரத்தில் கொடுக்க மறுக்கிறார்கள். பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தை கூட கூட்டவில்லை. கூட்டாட்சியின் இந்தத் தூண்கள் உடைந்துவிட்டன.
வலிமையான தலைவராக இருக்க ஒவ்வொரு நாளும் 56 அங்குல மார்பை வைத்துக் கொண்டு, தினமும் அதை தட்டிக் கொண்டு இருக்க வேண்டிய தேவை இல்லை.” இவ்வாறு மஹூவா மொய்த்ரா பேசியுள்ளார். காளி தெய்வம் குறித்த மொய்த்ராவின் கருத்துக்கு வரிந்துகட்டிக் கொண்டு வந்த பாஜக-வினர், கூட்டாட்சியை மோடி அரசு நொறுக்கி விட்டதாக கூறிய குற்றச்சாட்டு குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.